நடிகர் விஜய் நடிப்பில் மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் லியோ. செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் ஒரு மாஸான கேங்ஸ்டர் ரோலில் நடித்து வருகிறார். இந்தநிலையில் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் அப்படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடிய நா ரெடி என்கிற பாடலும் வெளியிடப்பட்டது.
மேலும் நா ரெடி பாடலை நடிகர் விஜய்யுடன் சேர்ந்து பிக்பாஸ் மூலம் பிரபலமான அசல் கோளார்-ம் பாடி இருந்தார். இப்பாடல் வெளியான உடனே வைரல் ஹிட் ஆன நிலையில், இன்ஸ்டாவில் திரும்பிய பக்கமெல்லாம் நா ரெடி பாடலுக்கு நடனமாடி பலரும் ரீல்ஸ் போட்டு வருகின்றனர். மேலும் இப்பாடல் எந்த அளவுக்கு ரீச் ஆனதோ அந்த அளவுக்கு கடும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வந்தது. இதற்கு காரணம் இப்பாடல் வரிகள் முழுக்க உயிருக்கு தீங்குவிளைவிக்கும் போதை பொருள்களான புகையிலை மற்றும் மதுவை ஊக்குவிக்கும் வகையில் இருந்தது தான்.
![](https://seithimalar.com/wp-content/uploads/2023/06/vijay-2.jpg)
அதுமட்டுமின்றி இப்பாடலில் நடிகர் விஜய் சிக்ரெட் பிடித்தபடி நடனமாடும் காட்சிகளும் அதில் இடம்பெற்று இருந்ததால், இது அவரது ரசிகர்களை தவறாக வழிநடத்தும் செயல் எனக்கூறி அரசியல் வாதிகள் முதல் சமூக ஆர்வலர்கள் வரை விஜய்யின் இந்த பாடலை தடை செய்ய வேண்டும் என்று குரல் கொடுத்து வந்தனர். அதுமட்டுமின்றி சமீபத்தில் ஒரு பள்ளி சிறுவன் விஜய்யை புகைபிடிக்காதிங்க அங்கிள் என அட்வைஸ் செய்து வெளியிட்ட வீடியோவும் வைரலானது. மேலும் இப்பாடலுக்கு தடை விதிக்க கோரி கமிஷனர் அலுவலகத்தில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவிலும் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
![](https://seithimalar.com/wp-content/uploads/2023/06/vijay-3-1.jpg)
இப்படி இப்பாடலுக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் தொடர்ந்து வந்ததால், அதிரடியாக முடிவெடுத்த நடிகர் விஜய், படக்குழுவிடம் சொல்லி அப்பாடலில் ‘புகைப்பிடித்தல் புற்று நோயை உண்டாக்கும், உயிரைக் கொல்லும்’ என்கிற எச்சரிக்கை வாசகத்தை சேர்க்க சொல்லியுள்ளார். இதையடுத்து நடிகர் விஜய் சொன்ன அந்த மாற்றத்தை சைல்ண்டாக செய்து முடித்தது லியோ படக்குழு. தற்போது புகைப்பிடிக்கும் காட்சிகளில் அந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெற்று உள்ளது.