கோவை காளப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் திட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தொடங்கி வைத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை செயலர் குமரகுருபரன், தொடக்கப் பள்ளிக் கல்வி இயக்குநர்கள் அறிவொளி, கண்ணப்பன், நாகராஜ் முருகன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
![](https://seithimalar.com/wp-content/uploads/2024/02/schoolstudent.jpg)
நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசியதாவது :
“மாணவர்களுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன் அடிப்படையில் படிக்கும் பள்ளியிலேயே மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்வதற்கான சிறப்புத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை மற்றும் ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித்தொகையை பயனாளர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. அதனால், ஒவ்வொரு மாணவருக்கும் வங்கிக் கணக்கு தேவைப்படும் நிலையில், புதிதாக வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண் அவசியமாக உள்ளது. எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தைச் சேர்ந்த ஆதார் முகவர்கள், பள்ளி வாரியாக சென்று ஆதார் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் பணிகளை தொடங்கியுள்ளனர்”
இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.