தெலங்கானா மாநிலம் மஹபூபாபாத்தைச் சேர்ந்த கோகுலோத் லாலி (70) மற்றும் சமிதா நாயக் (80) ஆகியோர் சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு வெளியேறி கோயிலில் ஏப்ரல் 28 ம் தேதி மாலை மட்டும் மாற்றி கொண்டு திருமணம் செய்து ஒன்றாக சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.
இவர்களுக்கு நான்கு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இந்து முறைப்படி அவர்கள் திருமணம் செய்து கொண்டாலும் வழக்கமான இந்து திருமணங்களைப் போலல்லாமல் அவர்கள் திருமணத்தில் தாலி கூட கட்டி கொள்ளவில்லை. இதனால் பல ஆண்டுகளாக ஒன்றாக குடும்பம் நடத்தி வாழ்ந்தாலும் தனது கழுத்தில் கணவர் கட்டிய தாலி இல்லையே என்று கோகுலோத் லாலி வருந்தினார்.
அதை ஈடு செய்யும் வகையில் மகன், மகள், பேரக்குழந்தைகள் தங்கள் தாத்தா, பாட்டிக்கு அனைத்து இந்து சடங்குகளையும் பின்பற்றி முறைப்படி திருமண விழாவை நடத்தினர். 80 வயது தாத்தாவுக்கும் 70 வயது பாட்டிக்கு திருமணம் செய்த சம்பவம் தெலங்கானாவில் வைரலாகி வருகிறது.