திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொய்கைத்திருநகரை சேர்ந்த சந்தியா, பொத்தமேட்டுப்பட்டியை சேர்ந்த மார்க்ரேட் வனிதா மற்றும் தெற்கு அஞ்சல்காரன்பட்டி சேர்ந்த அல்போன்ஸ் மேரி ஆகியோர் இன்று காலை மணப்பாறை காவல் நிலையத்தில் நேரில் சென்று, மஞ்சம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவர் BHEL-ல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகக் கூறி லட்ச கணக்கில் பண மோசடி செய்திருப்பதாக போலீஸில் புகார் அளித்தனர்.
அதில், மணப்பாறை அடுத்த மஞ்சம்பட்டியை சேர்ந்த கபிரியேல் மனைவி லாரன்ஸ் சோபியா என்பவர் தங்களுடன் பழகி, தான் திருச்சி BHEL-ல் நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகவும், தங்களது குடும்ப கஷ்டத்தை நன்கு அறிந்திருப்பதால் தங்களுக்கும் திருச்சி BHEL-ல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி தலா சுமார் மூன்றரை லட்சம் என வசூல் செய்ததாகவும், அதற்கு திருச்சி BHEL-ல் நிறுவனத்திலிருந்து வேலை நியமண ஆணைகள் அனுப்பியதாக சில ஆவணங்களை வாட்ஸப்பில் அளித்ததாகவும்,
பின் அவற்றை அழித்துவிட்டதாகவும், ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் அலைக்கழிக்கப்படுதாகவும், இதுவரை எந்தவித உத்தரவாதமும் இல்லாமல் தாங்கள் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்டியே சிரமமடைந்து வருவதாகவும், பணத்தை திரும்ப கேட்க சென்றபோது இழிவான வார்த்தைகளை கூறி விரட்டிவிடுவதாகவும் கூறியிருந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் கூலித்தொழிலாளிகளாகவும், கணவனை இழந்தவராகவும் இருப்பதால் பணத்தை பெற்றுக்கொண்டு ஏமாற்றி வரும் நபரை தங்களால் ஒன்றும் செய்ய முடியாது எனவும், போலீஸார் மற்றும் அரசு தரப்பில் தங்களது பணம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுத்து தாருங்கள் என கண்ணீர் மல்க புகார் தெரிவித்துள்ளனர்.
புகாரினைதொடர்ந்து, காவல் ஆய்வாளர் குணசேகரன், உதவி காவால் ஆய்வாளர் வாசுதேவன் தலைமையிலான போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.