நெல்லை மாவட்டம் தாழையூத்தை சேர்ந்தவர் ஜேக்கப் (37). இவர் பிரபல ரவுடி ராக்கெட் ராஜா என்பவரது கூட்டாளி. இவர் பாளையங்கோட்டை சிறையில் முத்து மனோ கொலை வழக்கிலும் மற்றும் பிரபல ரவுடி சிந்தா சரவணன் கொலை வழக்கிலும் தொடர்புடையதாக கூறி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இவர் கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாகவும் இருந்து வந்தார்.
இந்நிலையில் போலீசார் இவரை தேடி வந்த நிலையில், இவர் குமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்கள் வந்தன. வள்ளியூர் சரக டிஎஸ்பி யோகேஷ்குமார் தலைமையில், நெல்லை மாவட்ட எஸ்பி.யின் தனிப்படையினர் அங்கு சென்று ஜேக்கப்பை கைது செய்துள்ளனர். தொடர்ந்து தாழையூத்து இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் தலைமையில், தனிப்படையினர் திசையன்விளை ஆனைக்குடியில் உள்ள ராக்கெட் ராஜா வீட்டுக்கு அழைத்து வந்து அங்கு போலீசார் சோதனையிட்டபோது ஒரு நாட்டு துப்பாக்கி, மான் கொம்பு, அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் இதுகுறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.