தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிதாக கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கட்டுமான பணிகள் நிதி பற்றாக்குறை காரணமாக பணிகள் நிறைவு பெறாமல் உள்ளது. இந்த பணி முழுமை பெற ரூபாய். 40 கோடிக்கு மேல் தேவைப்படும் என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர். இதற்கான நிதியை நடிகர், நடிகைகள் வழங்கி வருகின்றனர். அந்த வகையில் அண்மையில் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ரூ.1 கோடி நிதி வழங்கினார்.
இந்த நிலையில், நடிகர் சங்கத்தின் அறக்கட்டளை உறுப்பினரும், நடிகருமான கமல்ஹாசன் மார்ச் 09 ஆம் தேதி நடிகர் சங்க கட்டட பணியைத் தொடர்வதற்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கியுள்ளார். இதனை நடிகர் சங்க நிர்வாகிகளான பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி எஸ்.முருகன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் விஜய் தனது சொந்த நிதியிலிருந்து ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பிடுள்ளது:
“தென்னிந்திய நடிகர் சங்க கட்டட பணிகளை தொடர ஏதுவாக நடிகர் விஜய் நடிகர் சங்கத்துக்கு வளர்ச்சி நிதியாக அவரது சொந்த நிதியிலிருந்து ரூபாய். 1 கோடியை நன்கொடையாக வழங்கியுள்ளார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது”
இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.